திருவெண்ணைநல்லூர் அருகே அடகு கடையை உடைத்து நகை-பணம் கொள்ளை
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள திருமுண்டீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவர் அந்த பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே அரசூர்- திருக்கோவிலூர் மெயின்ரோட்டில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது வீடும் கடையை ஒட்டி உள்ளது.
நேற்று மாலை ராஜேந்திரனின் மனைவிக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவரை அழைத்து கொண்டு விழுப்புரம் வந்தார். அங்கிருந்து சென்னை செல்ல முடிவு செய்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கடையை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த நகைகளை எடுத்தனர். கடை திறந்து கிடப்பதை பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த கொள்ளையர்கள் நகையுடன் தப்பி ஓடினார்கள்.
இந்த தகவலை அருகில் உள்ள கடைக்காரர்கள் ராஜேந்திரனுக்கு தெரிவித்தனர். அவர் உடனடியாக ஊருக்கு விரைந்தார்.
கடைக்குள் சென்று பார்த்த போது அடகு பிடிக்கப்பட்ட 5 பவுன் நகை, 100 வெள்ளிக்கொலுசு, ரூ.40 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ராஜேந்திரன் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு இதே பகுதியில் உள்ள சிவன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை போனது. தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் அந்த பகுதி மக்கள் பீதி உள்ளனர்.