செய்திகள்
கல்லணை

சம்பா சாகுபடிக்காக கல்லணையில் நாளை தண்ணீர் திறப்பு

Published On 2019-08-16 10:40 GMT   |   Update On 2019-08-16 11:32 GMT
டெல்டா மாவட்டங்களில் ஒருபோக சம்பா சாகுபடிக்காக கல்லணை நாளை திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில் 6 அமைச்சர்கள் மற்றும் 8 கலெக்டர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
பூதலூர்:

ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் அணை திறக்கப்படவில்லை.

இதனால் டெல்டா மாவட்டங்களில் 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்தது. இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி இதைத் தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டது.

கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிட்ட தண்ணீர் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்னும் சில தினங்களில் அணை முற்றிலும் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 13-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் காவிரி டெல்டா பகுதி மக்களின் ஒருபோக சம்பா சாகுபடிக்காகவும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.



இந்த தண்ணீர் கரூர் திருச்சி வழியாக கல்லணையை நாளை அதிகாலை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நாளை காலை 11 மணிக்கு கல்லணையிலிருந்து முறையாக காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் ஒரு போக சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

விழாவில் வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் துரைகண்ணு, காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர், சம்பத் மற்றும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்ட கலெக்டர்களும், டெல்டா மாவட்டங்களில் உள்ள எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் பொதுப்பணித்துறை வேளாண்மைத் துறை சார்ந்த அதிகாரிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

தண்ணீர் திறந்து விடப்படுவதையொட்டி கல்லணையில் உள்ள அனைத்து ஷட்டர்கள் மற்றும் மதகுகள் பழுது நீக்கி சீரமைக்கப்பட்டுள்ளது. கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்று மதகுகள் வர்ணங்கள் பூசப்பட்டு திறப்பு விழாவுக்காக புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

நாளை காலை கல்லணையில் திறக்கும் தண்ணீர் கடைமடை பகுதிவரை விரைவில் சென்றடைய வசதியாக அனைத்து ஆறுகளிலும் முறை வைக்காது முழு அளவில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News