செய்திகள்

விக்கிரவாண்டி அருகே விபத்து- லாரி மோதி ஆம்னி பஸ் டிரைவர் பலி

Published On 2019-06-19 05:16 GMT   |   Update On 2019-06-19 05:16 GMT
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே லாரி மோதிய விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி:

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை தூத்துக்குடி மணப்பாடு பகுதியை சேர்ந்த கனிஷ்தர் (வயது 45) ஓட்டிவந்தார்.

நள்ளிரவு 12.30 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி புறவழிச்சாலை அருகே சுங்கசாவடி பகுதியில் அந்த பஸ் வந்தது, அப்போது பஸ்சின் பின்சக்கர டயர் பஞ்சர் ஆனது.

அந்த நேரத்தில் அந்த வழியாக சென்னை-திருச்சி மார்க்கமாக மற்றொரு ஆம்னி பஸ் வந்தது. அந்த பஸ்சை கன்னியாகுமரி அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த பரமசிவம் ஓட்டிவந்தார். அவர் பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின்னர் ஆம்னி பஸ் டிரைவர்கள் கனிஸ்தர், பரமசிவம் ஆகியோர் சேர்ந்து பஸ்சில் பஞ்சரான டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மீன் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது. அந்த லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கனிஷ்தர் பலியானார். பரமசிவம் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News