செய்திகள்

ஊட்டியில் தேசிய அறிவியல் கருத்தரங்கம்- 26 விஞ்ஞானிகளுக்கு கவர்னர் விருது வழங்கினார்

Published On 2019-01-31 09:27 GMT   |   Update On 2019-01-31 09:27 GMT
ஊட்டியில் இன்று தொடங்கிய தேசிய அறிவியல் கருத்தரங்கில் இந்தியாவில் மண் வளம் மற்றும் நீர் வளத்தில் சிறந்து விளங்கிய 26 விஞ்ஞானிகளுக்கு விருதுகளை வழங்கி கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாராட்டினார். #BanwarilalPurohit
ஊட்டி:

ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மண் மற்றும் நீர் வள தொழில்நுட்பங்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து 28-வது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று நடைபெற்றது.

இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து இந்தியாவில் மண் வளம் மற்றும் நீர் வளத்தில் சிறந்து விளங்கிய 26 விஞ்ஞானிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். மண் வளம் மற்றும் நீர் வளங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், மண் அரிப்பு, நிலச்சரிவு, மழைநீர் சேகரிப்பு உட்பட 10 தலைப்புகளில் மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் , கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாய சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

கருத்தரங்கிற்கு பின்னர் உருவாக்கப்படும் திட்ட அறிக்கைகள் அரசு மற்றும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்படும்.

இன்று நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இந்திய மண் வள பாதுகாப்பு சங்கம் தலைவர் சுராஜ் பான், அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் சீனிவாசன், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊட்டியில் தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் முதல் முறையாக நடைபெறுவது இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். தொடர்ந்து ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். #TNGover #BanwarilalPurohit
Tags:    

Similar News