செய்திகள்
ராஜபாண்டி-தினேஷ்-அங்கம்மாள்

மதுரை அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 ஆயுதப்படை போலீசார் பலி

Published On 2018-12-10 06:48 GMT   |   Update On 2018-12-10 06:48 GMT
மதுரை அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 ஆயுதப்படை காவலர்கள் பலியானார்கள். விபத்தில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் பரிதாபமாக இறந்தார்.
உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜபாண்டி (வயது 27).

அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தினேஷ் (28). இவரும் ராஜபாண்டியும் சென்னை ஆயுதப்படையில் காவலர்களாக உள்ளனர். திருமண விழாவில் பங்கேற்பதற்காக 2 பேரும் விடுமுறையில் ஊருக்கு வந்தனர்.

நேற்று 2 பேரும் மோட்டார்சைக்கிளில் மதுரை சென்று திருமண விழாவில் பங்கேற்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினர்.

செக்கானூரணி அருகே புளியங்குளம் பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. அதே வேகத்தில் எதிர் திசையில் வந்த காரின் மீதும் மோதியது.

இந்த விபத்தில் ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த தினேஷ், சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ராஜபாண்டியின் தாயார் அங்கம்மாள் (63) அதிர்ச்சி அடைந்தார். சோகத்தில் இருந்த அவர் நள்ளிரவில் இறந்தார். மகன் பலியான அதிர்ச்சியில் தாயும் இறந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News