செய்திகள்
அகரம் தாமிரபரணி ஆற்றில் ஆஸ்திரேலிய கவர்னர் புனித நீராடிய காட்சி.

புஷ்கர விழா - அகரம் தாமிரபரணி ஆற்றில் ஆஸ்திரேலிய கவர்னர் புனித நீராடினார்

Published On 2018-10-19 09:01 GMT   |   Update On 2018-10-19 09:05 GMT
புஷ்கர விழாவையொட்டி நேற்று மாலை தாமிரபரணி ஆற்றில் ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு பிரிட்டன் மாநில கவர்னர் முத்துவேல் சசீந்திரன் புனித நீராடினார். #ThamirabaraniPushkaram
செய்துங்கநல்லூர்:

தாமிரபரணி ஆற்றில் கடந்த 11-ந்தேதி முதல் மகா புஷ்கர விழா நடந்து வருகிறது. இதில் ஏராளமான வெளிமாவட்டம், மாநிலம், வெளி நாட்டை சேர்ந்தவர்கள் வந்து நீராடி வருகிறார். நேற்று மாலை ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு பிரிட்டன் மாநில கவர்னர் முத்துவேல் சசீந்தீரன் குடும்பத்துடன் நீராடினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை தாயகமாக கொண்டவர் முத்துவேல் சசீந்திரன். இவர் தற்போது ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு பிரிட்டன் மாநில கவர்னராக பணியாற்றி வருகிறார். புஷ்கர திருவிழாவையொட்டி தாமிரபரணியில் நீராட நேற்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். பின்னர் அவர் அகரம் தாமிரபரணி ஆற்றில் நீராடினார். தொடர்ந்து அகரம் அஞ்சேல் பெருமாள் கோயில், அருகில் உள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன்பின் அவர்கள் முறப்பநாடு வந்து கைலாசநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்தனர். பின் அவர்கள் அங்கிருந்து மாலை தூத்துக்குடி விமானத்தில் பிரிட்டன் கிளம்பினர்.

மேலும் முறப்பநாடு, ஆழிகுடி, கருங்குளம், அகரம் ஆகிய பகுதியில் சிறப்பு ஆராதனை நடந்தது. 4 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை நாட்களால் முறப்பநாடு குரு தீர்த்தக் கட்டத்தில் அதிகமான பக்தர்கள் நீராடினார்கள்.

காலையில் சிறப்பு யாகம் நடந்தது. மாலையில் நதி ஆராத்தி நடந்தது. முறப்பநாடு அருகே ஆழிகுடியிலும் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து விளக்கு பூஜை நடந்தது.

இதில் 108 பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் தாமிரபரணிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. அகரம் தசவதார தீர்த்தகட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு அன்னை தாமிரபரணி நதிக்கு அனைத்து அபிசேகமும் செய்து 6.45 மணிக்கு மங்கள ஆரத்தி தீபாராதனை செய்தனர்.

கருங்குளத்தில் நடந்த மகாபுஷ்கர தினவிழாவை முன்னிட்டு காலை யாகசாலை பூஜை நடந்தது. மாலை நதிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.  #ThamirabaraniPushkaram


Tags:    

Similar News