செய்திகள்

தஞ்சை அருகே மனைவி - 3 மாத குழந்தை கொலை - வாலிபர் வெறிச்செயல்

Published On 2018-09-26 05:46 GMT   |   Update On 2018-09-26 05:46 GMT
தஞ்சை அருகே மனைவி, குழந்தையை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூதலூர்:

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே புதுக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது 32). இவரது மனைவி ஷீலா (24). இவர்களுக்கு ரித்தீஷ் (4) , பிரதீஷ் (3 மாதம்) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆறுமுகசாமி திருச்சி திருவெறும்பூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு வேலை முடிந்து வழக்கம் போல் வீடு திரும்பினார். அப்போது இரவில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப் படுகிறது.

இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்த ரித்தீஷ் நீண்டநேரமாக அழுது கொண்டிருந்தான். இதனால் குழந்தை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டுக்குள் ஷீலா கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே 3 மாத குழந்தை பிரதீசும் பிணமாக கிடந்தான்.

தாயும், குழந்தையும் அருகருகே கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆறுமுகச்சாமியும் வீட்டில் இருந்து வெளியே சென்று தலைமறைவாகி விட்டார்.

இதைதொடர்ந்து தாய்- குழந்தை கொலை சம்பவம் பற்றி செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் பாபநாசம் போலீஸ் டி.எஸ்.பி. செல்வராஜ் (பொறுப்பு), பூதலூர் இன்ஸ்பெக்டர் கரிகால சோழன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், கங்காதரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தாய்-குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையுண்ட ஷீலாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வர்க்கோட்டை அருகே உள்ள சோளகம்பட்டி கிராமம் ஆகும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகச்சாமிக்கும், ஷீலாவுக்கும் திருமணம் நடந்தது. இருவருமே பட்டதாரிகள் ஆவர்.

இந்த நிலையில் மனைவி ஷீலாவை கழுத்தை அறுத்தும், 3 மாத குழந்தையை கழுத்தை நெரித்தும் ஆறுமுகச்சாமி கொலை செய்ததை ஏன்? என்று தெரியவில்லை. தற்போது தலைமறைவாக இருக்கும் ஆறுமுகச்சாமியை பிடித்து விசாரித்தால் மட்டுமே கொலைக்காக காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மனைவி-குழந்தையை கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பூதலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News