செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை - சேர்வலாறு அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை தாண்டியது

Published On 2018-07-12 09:54 GMT   |   Update On 2018-07-12 09:54 GMT
மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது மீண்டும் சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை கடந்து 103 அடியாகி உள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக ஓய்ந்திருந்த தென்மேற்கு பருவ மழை மீண்டும் நேற்று முன்தினம் முதல் பெய்து வருகிறது. நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்ச மாக 58 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குண்டாறு அணை பகுதியில் 43 மில்லி மீட்டரும், நகர் புறத்தில் செங்கோட்டையில் அதிகபட்சமாக 28 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2392 கன அடி தண்ணீர் இன்று காலை வந்து கொண்டு இருக்கிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று 92.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 97.70 அடியாக இருந்தது. இது ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று 103.02 அடியாக உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை கடந்து 116 அடி வரை சென்றது. மீண்டும் நீர்மட்டம் 63 அடி வரை குறைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை கடந்து 103 அடியாகி உள்ளது. மணிமுத்தாறு அணை பகுதியில் இன்று காலை வரை 2.4 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 388 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று 80.50 அடியாக உள்ளது.

கடனாநதியின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 71 அடியாகவும், ராமநதியின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 69 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 112.75 அடியாக உள்ளது.



Tags:    

Similar News