செய்திகள்
சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் திறக்கப்பட்ட சுரங்கப்பாதையில் பயணிகள் செல்லும் காட்சி.

சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் மேலும் ஒரு நுழைவுப்பாதை திறப்பு

Published On 2018-07-12 07:59 GMT   |   Update On 2018-07-12 07:59 GMT
சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக மேலும் ஒரு நுழைவுப் பாதை திறக்கப்பட்டுள்ளது. #MetroTrain
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்டப் பாதையிலும் திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது. பயணிகள், பொது மக்கள் இடையே மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் மிகப்பெரிய ரெயில் நிலையமாக உருவாக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரல் மூர்மார்க்கெட் மின்சார ரெயில் நிலையங்களில் இருந்து வரும் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு எளிதில் செல்ல 6 நுழைவுப்பாதைகள் அமைக்கப்படுகிறது.

சென்ட்ரலில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை பயணிகள் எளிதில் கடப்பதற்காகவும், மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்வதற்காகவும் பிரம்மாண்டமான சுரங்க நடைபாதை திறக்கப்பட்டுள்ளது. 2 எஸ்க்லேட்டர்கள் நடந்து செல்ல படிக்கட்டு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை 45 மீட்டர் நீளத்திலும், 11 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்டதையொட்டி பயணிகள் எளிதில் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும், பூங்கா நகர் ரெயில் நிலையத்துக்கும் சென்று வருகின்றனர். இதனால் பொது மக்கள், பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #MetroTrain
Tags:    

Similar News