செய்திகள்

கவர்னர் ஆய்வு மீது மு.க.ஸ்டாலின் தேவையில்லாமல் குறை கூறுகிறார்: வானதி சீனிவாசன்

Published On 2018-06-29 11:25 GMT   |   Update On 2018-06-29 11:25 GMT
தமிழக கவர்னர் ஆய்வு மீது மு.க.ஸ்டாலின் தேவையில்லாமல் குறை கூறுகிறார் என்று வானதி சீனிவாசன் அன்னூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #mkstalin #vanathisrinivasan #tngovernor

அன்னூர்:

பாரதீய ஜனதா மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் அன்னூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மத்தியில் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் உஜ்வாலா திட்டத்தில் இலவச கியாஸ் வழங்கப்பட்டு உள்ளது. அரசு மானியங்கள் இடைதரகர்கள் இல்லாமல் செயல்படுகிறது. 4 வருடங்களில் ரூ.365 கோடியில் 433 திட்டங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக சென்றடைகிறது. இது வங்கி கணக்கில் உறுதி செய்யப்படுகிறது.

நதிகள் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. அதில் கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு இணைக்கப்பட உள்ளது. காவிரி மேலாண்மை, எய்ம்ஸ் மருத்துவமனை, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பசுமை வழிச்சாலைகள் முதல் கட்டமாக தொடங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து அறிக்கை அளித்தால் மீண்டும் தொழில் தொடங்க மத்திய அரசு உதவி செய்யும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.


தி.மு.க. செயல் தலைவருக்கு கட்சி பணி ஏதும் இல்லை. பொதுமக்கள் பிரச்சினைக்காக போராடலாம். இது இல்லாமல் கவர்னர் வளர்ச்சிப் பணி ஆய்வு மீது தேவையில்லாத குறைகளை கூறி வருகிறார். ராஜ் பவனில் செலவுகள் கோடியில் இருந்ததை லட்சமாக குறைத்துள்ளார்.

சேலம்-சென்னை 8 வழிச் சாலையால் 150 சதவீதம் செலவு குறையும். அதில் மொத்த சாலையில் 1 சதம் மட்டுமே விவசாய நிலங்கள் எடுக்கப்படுகிறது. மத்திய அரசு விவசாய நலன் காக்கப்படுகிறது. நில ஆர்ஜித பணி தொடங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வடக்கு மாவட்ட தலைவர் மோகன் மந்திராசலம், அவிநாசி தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார், அன்னூர் ஒன்றிய தலைவர் விஜயகுமார், நகர தலைவர் ராஜராஜசாமி, வெள்ளிங்கிரி, நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் பரசுராமன், ஒன்றிய மகளிர் அணி தலைவர் ராதாமணி, மாவட்ட செயற்குழு உறுப் பினர் வேலுச்சாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக அன்னூர் அருகே உள்ள கணேச புரத் தில் மலிவு விலை மருந்து கடையை வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். எல்லப்பாளையம் கிராமத் தில் 100 பேருக்கும், மூக்கனூர் கிராமத்தில் 70 பேருக்கு இலவச கியாஸ் அடுப்பு, சிலிண்டர் வழங்கப்பட்டது. அன்னூர் பயணியர் மாளிகை, எல்லப்பாளையம்பிரிவு, முதலிபாளையம் உள்ளிட்ட 10 இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டது. #mkstalin #vanathisrinivasan #tngovernor 

Tags:    

Similar News