செய்திகள்

தேர்தல் அதிகாரி வராததை கண்டித்து கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை சிறைவைத்து போராட்டம்

Published On 2018-04-24 04:34 GMT   |   Update On 2018-04-24 04:34 GMT
தேர்தல் அதிகாரி வராததை கண்டித்து கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை சிறைவைத்து போராட்டம் நடத்திய 35 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேட்டவலம்:

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து அதில் போட்டியிடுவதற்காக மனுதாக்கல் நடந்தது. இதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.சார்பில் தலா 11 பேர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் 20 பேர், பா.ம.க.சார்பில் 10 பேர் என 52 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த தேர்தலுக்கான தடையை சுப்ரீம்கோர்ட்டு நீக்கியதையடுத்து வேட்பு மனு பரிசீலனை நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையொட்டி மனுதாக்கல் செய்திருந்தவர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன் காத்திருந்தனர். ஆனால் தேர்தல் அலுவலர் மாலை 5 மணி வரை வரவில்லை. இதனால் விரக்தி அடைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், நகர செயலாளர் செந்தில்குமரன் தலைமையில் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டிசாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வேட்டவலம் போலீசார் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரசேகரன் தலைமையில் அங்கு வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்லாததால் 35 பேரை கைது செய்தனர்.


கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட கடந்த 6-ந்தேதி 39 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர்

நேற்று வேட்புமனுதாக்கல் பரிசீலனைக்காக தேர்தல் அலுவலர் மதியழகன் வந்திருந்தார்.

வேட்புமனுதாக்கல் செய்த யாரையும் பரிசீலனைக்கு அழைக்காமல், 11 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்படுவதாக கூறி,தகவல் பலகையில் ஒட்ட ஏற்பாடு செய்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அதிமுக பிரமுகர் வேலு தலைமையில், பொதுமக்கள் அலுவலகத்தை பூட்டு போட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News