தினகரனால் பதவி பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம்- சி.ஆர்.சரஸ்வதி பேச்சு
மதுரை:
டி.டி.வி.தினகரன் இன்று மேலூரில் புதிய கட்சி, கொடியை அறிமுகப்படுத்தினார். இதற்காக நடந்த விழாவில் நடிகையும், தினகரன் ஆதரவாளருமான சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது:-
தற்போது துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் முன்பு எந்த நிலையில் இருந்தோம் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.
தினகரனால் சசிகலா மூலம் ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்யப்பட்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். தினகரனால் பதவி சுகம் பெற்றவர் தற்போது மனசாட்சியோடு பேச வேண்டும்.
தற்போது நடந்துவரும் மக்கள் விரோத அரசு ஜெயலலிதாவின் திட்டங்களை படிப்படியாக நிறுத்தி வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து கட்சிகளையும் தோற்கடித்து தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.
எங்கள் அணிக்கு குக்கர் சின்னம் அளித்த டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை உயர்நீதிமன்றமும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கும் என நம்புகிறோம். அப்போது தமிழகத்தில் காட்சியும் மாறும், ஆட்சியும் மாறும். அது விரைவில் நடக்கும்.
எங்கள் புதிய கட்சி அ.தி.மு.க.வையும், இரட்டை இலையும் மீட்டெடுத்து தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை சசிகலா, தினகரன் தலைமையில் அமைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews