மணக்குள விநாயகர் கோவிலில் அன்னதான திட்டம்: நாராயணசாமி நாளை தொடங்கி வைக்கிறார்
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் 2017-18ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது புதுவை, காரைக்கால் கோவில்களில் அன்னதான திட்டம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக கடந்த மாதம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர், புதுவையில் மணக்குள விநாயகர் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், குரு சித்தானந்தா கோவில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில், காரைக்காலில் உள்ள அம்மையார் கோவில், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், அம்பகரத்தூர் பத்ரகாளி அம்மன் கோவில்களில், வரும் தை முதல் தேதியில் இருந்து அன்னதான திட்டம் நடைமுறை படுத்தப்படும் என தெரிவித்தார்.
இதன்படி, மணக்குள விநாயகர் கோவிலில் நாளை அன்னதான திட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைக்கிறார்.
விழாவில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் ஆகியோர் பங்கேற்கின்றனர். அன்னதான திட்டம் முதல் கட்டமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் செயல்படுத்தப்படுகிறது. #tamilnews