செய்திகள்

தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரெயில் சுரங்க பணியில் மீண்டும் வெளியேறிய ரசாயன கலவை

Published On 2017-10-22 10:31 GMT   |   Update On 2017-10-22 10:31 GMT
தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரெயில் சுரங்க பணியில் மீண்டும் ரசாயன கலவை வெளியேறியது. இச்சம்பவம் அடிக்கடி நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ராயபுரம்:

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது.

இதில் முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து தண்டையார்பேட்டை வரை சுரங்கப் பாதை அமைக்கும் பணி 2 வழித்தடங்களில் நடந்து வருகிறது. ஒரு வழித்தடத்தில் பணிகள் முடிவடைந்து விட்டது.

2-வது சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. கடந்த வாரம் தண்டையார்பேட்டை அப்பாசாமி தோட்டம் தெருவில் கான்கிரீட் ரசாயன கலவை வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று தண்டையார்பேட்டை மெட்ரோ ரெயில் சுரங்க பணி நடைபெறும் பகுதியில் ரசாயன கலவை வெளியேறியது. அங்குள்ள குருவம்மாள் தோட்டம் தெருவில் இரவு 11 மணியளவில் ‘குபு குபு’ வென கான்கிரீட்டுடன் ரசாயன கலவை வெளியேறியது.

இதனால் பொது மக்களிடையே பீதியும் பதட்டமும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை போலீசாரும், மெட்ரோ ரெயில் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் வெளியேறிய ரசாயனக் கலவை 20-க்கும் மேற்பட்ட பேரல்களில் சேகரித்து எடுத்து செல்லப்பட்டது. இப்பணி 4 மணி நேரம் நடந்தது. ரசாயன கலவை வெளியேறிய சம்பவம் இரவில் நடந்ததால் ரோட்டில் வாகன போக்கு வரத்து பாதிக்கப்படவில்லை. இத்தகைய சம்பவம் அடிக்கடி நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News