செய்திகள்

ஓமலூர் அருகே கர்ப்பிணி பெண்ணை அடித்து உதைத்து 7 மாத குழந்தை கடத்தல்

Published On 2017-04-12 10:32 GMT   |   Update On 2017-04-12 10:32 GMT
ஓமலூர் அருகே கணவர் 2-வது திருமணம் செய்ய சம்மதிக்காததால் கர்ப்பிணி மனைவியை அடித்து உதைத்து 7 மாத குழந்தையை கடத்தி சென்றனர்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகள் ரஞ்சிதாவை அய்யம்பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்த சிவாஜி என்பவரின் மகன் சதீஸ்குமார் (27) என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்து உள்ளார். இவர்களுக்கு தனுசிக் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் ரஞ்சிதா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் ரஞ்சிதா கணவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் கடன் அதிகமாக வாங்கியதாகவும் தெரிகிறது. இதனால் அடிக்கடி ரஞ்சிதாவை அவரது அப்பாவிடம் பணம் வாங்கி வா என கூறி அடித்து உதைத்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தனது தாய் வீட்டில் ரஞ்சிதா குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சதீஸ்குமார் சித்தனூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் வரதட்சணையாக ரூ.5 லட்சம் கொடுப்பதாகவும் இதை வைத்து கடனை அடைத்து விடலாம். எனவே 2-வது திருமணம் செய்ய சம்மதிக்க வேண்டும் என கூறி சதீஸ்குமார் வற்புறுத்தி வந்தார். மேலும் சதீஸ்குமார் அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் ரஞ்சிதாவிடம் கேட்டபோது 2-வது திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திர மடைந்த சதீஸ்குமார் மற்றும் குடும்பத்தினர் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் ரஞ்சிதாவை அடித்து உதைத்துவிட்டு 7 மாத குழந்தையை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதில் வயிற்று வலியால் அவதிப்பட்ட ரஞ்சிதாவை அவரது உறவினர்கள் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கடந்த 10-ந்தேதி ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அப்போது புகாரை வாங்க போலீசார் மறுத்து விட்டதாகவும், 7 மாத குழந்தை கடத்தப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையிலும் இது வரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் இளம்பெண் புகாரில் தெரிவித்தார்.

Similar News