செய்திகள்

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Published On 2017-03-20 04:26 GMT   |   Update On 2017-03-20 04:26 GMT
கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் மிதமான மழை பெய்தால் சீரான நீர் வரத்து இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது கும்பக்கரை அருவி. வருடம் முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தண்ணீர் வருவதால் எப்பொழுதும் சீரான நீர் வரத்து இருக்கும். இதனை ரசிக்க, குளிக்க தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலை, பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மழை குறைந்து சீரான அளவில் நீர் வரத்து இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது என வனச்சரகர் கருப்பையா தெரிவித்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் தேனி மாவட்டம் மற்றும் இதர பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் மிதமான மழை பெய்தால் சீரான நீர் வரத்து இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News