செய்திகள்

திண்டிவனம் அருகே தூர்வாரும் போது கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 தொழிலாளர்கள் பலி

Published On 2017-03-19 12:57 GMT   |   Update On 2017-03-19 12:57 GMT
திண்டிவனம் அருகே தூர்வாரும் போது கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 தொழிலாளர்கள் இறந்தனர். இந்த சம்பவம் நொளம்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள நொளம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் இருசப்பன் (வயது 45), வேணுகோபால் (32). கூலி தொழிலாளர்களான இவர்கள் அதே பகுதியை சேர்ந்த மேகவண்ணன் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணறு தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கிணற்றுக்குள் பாறையை உடைப்பதற்காகவும், மண்ணை தூர்வாருவதற்காகவும் வெடி மருந்துகளை வைத்தனர். பின்னர் வெடி வெடிக்கும்போது பாறை, மண் ஆகியவை மேல்பகுதிக்கு வராமல் தடுப்பதற்காக கிணற்றின் மேல்பகுதியை பனை மர துண்டுகள், இரும்பு குழாய்கள் மூலம் மூடும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் இருசப்பனும், வேணுகோபாலும் எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தனர்.

இதில் இருசப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வேணுகோபால் படுகாய மடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேணுகோபால் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஒலக்கூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருசப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 தொழிலாளர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்த சம்பவம் நொளம்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News