சிறுமலை பகுதியில் வறட்சியால் எலுமிச்சை விளைச்சல் பாதிப்பு
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் சாலக்கடை, தவுட்டுக்கடை, முடக்குத்துரை, ரொட்டிகிடங்கு, கரும்பாறை, மருதன்கடை உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் ஊடு பயிராக எலுமிச்சை சாகுபடி செய்துள்ளனர்.
பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் வேர் புழு தாக்குதல் காரணமாகவும் எலுமிச்சை விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயி ஆரோக்கியசாமி கூறுகையில், கடந்த காலங்களில் வாரம் 2 சிப்பம் (100 கிலோ) மகசூல் கிடைத்தது. வறட்சி காரணமாகவும் நோய் தாக்குதலாலும் தற்போது 5 கிலோ எலுமிச்சை கூட கிடைப்பதில்லை.
இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். விளைச்சல் குறைவு காரணமாக எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது. 1000 ரூபாயிக்கு விற்கப்பட்ட ஒரு சிப்பம் எலுமிச்சை ரூ.1500 ஆக அதிகரித்துள்ளது.