செய்திகள்

சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பிரசார பேரணி: 134 பேர் கைது

Published On 2017-02-17 08:30 GMT   |   Update On 2017-02-17 08:30 GMT
வாணியம்பாடி, குடியாத்தத்தில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பிரசார பேரணி சென்றது தொடர்பாக 134 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

சசிகலாவுக்கு எதிராக பிரசார பேரணி சென்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை தண்டனை பெற்றதால் அவரது ஆதரவாளரான, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தனது கரத்தை வலுப்படுத்த சுற்றுப் பயணம் செல்ல உள்ளார்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு எதிராக பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர். வாணியம்பாடியில் ஓ.பி.எஸ். மற்றும் தீபா ஆதரவாளர்கள் இணைந்து பிரசார பேரணி சென்றனர்.

வாணியம்பாடி கோனா மேடு பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை பேரணியாக சென்ற ஆதரவாளர்கள், சசிகலாவுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களை சந்தித்து ஓ.பி.எஸ்.-தீபா ஆதரவாளர்கள் பிரசாரம் செய்து ஆதரவு கோரினர்.

பிரசார பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, பேரணி சென்ற ஓ.பி.எஸ்.-தீபா ஆதரவாளர்கள் 34 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.

இதேபோல், குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சசிகலாவுக்கு எதிராக பிரசாரம் செய்து பேரணி சென்ற ஓ.பி.எஸ்.-தீபா ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர். வாணியம்பாடி, குடியாத்தத்தில் கைது செய்யப்பட்ட ஓ.பி.எஸ்.-தீபா ஆதரவாளர்கள் இன்று மாலைக்குள் விடுவிக்கப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News