செய்திகள்

மாணவர்கள் முற்றுகை போராட்டம்: மதுரை விமானங்கள் தாமதத்தால் பயணிகள் கடும் அவதி

Published On 2017-01-21 05:07 GMT   |   Update On 2017-01-21 05:07 GMT
மாணவர்களின் முற்றுகை போராட்டத்தால் மதுரை விமானங்கள் புறப்பட தாமதமானது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மதுரை:

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி மதுரை மாவட்டத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சாலை மறியல், ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை நகரில் திரும்பிய திசையெல்லாம் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று மாலையில் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள பெருங்குடி சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களுடன் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டம் நடத்திய மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் விமான நிலையம் முன்பு அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

மாணவர்கள் போராட்டத்தால் விமான நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் செல்ல இருந்த பயணிகள் அவதியடைந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து 7 மணிக்கு வரவேண்டிய விமானம் இரவு 10 மணிக்கு வந்து பின்பு புறப்பட்டு சென்றது. அதுபோல மாலை 5 மணிக்கு வந்து 7 மணிக்கு செல்லும் துபாய் விமானம் நள்ளிரவு 12 மணிக்கு தாமதமாக புறப்பட்டு சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுரை விமான நிலையத்துக்கு செல்லும் பைபாஸ் ரோட்டில் காமராஜர் நகர் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கொட்டும் மழையில் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News