‘திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் காதலன் மீது ஆசிட் வீசினேன்’: கைதான நர்சு வாக்குமூலம்
ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்ரீராம்புரம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருபவர் ஜெயக்குமார் (வயது32). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அங்கு நர்சாக வேலை பார்க்கும் லிடியா(26) என்ற பெண்ணுடன் ஜெயக்குமாருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மலர்ந்து, இருவரும் உயிருக்குயிராக காதலிக்க தொடங்கினார்கள்.
இவர்களது காதல் வேகமாக வளர்ந்து, 6 ஆண்டுகள் வரை நீடித்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஜெயக்குமார், லிடியாவை மெல்ல, மெல்ல தவிர்த்து வந்ததாகவும், வேறு இடத்தில் திருமணம் முடிக்க முயன்றதாகவும் லிடியா தரப்பில் கூறப்படுகிறது.
காதலன் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும், ஆத்திரமும் அடைந்த லிடியா, ஜெயக்குமாரை பழி வாங்க முடிவு செய்தார். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ஜெயக்குமார், பெங்களூருவில் மைசூர் சாலையில் தனது 2 சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அவரை தனது உறவினர்களுடன் பின்தொடர்ந்து வந்த லிடியா, மைசூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மால் அருகே ஜெயக்குமாரை மடக்கி, அவர் முகத்தில் ஆசிட் வீசினார். ஆரம்பத்தில் தன் முகத்தின் மீது தண்ணீர் தான் தெளித்திருக்கும் என்று நினைத்த ஜெயக்குமார், சிறிது நேரத்தில் ஆசிட் பட்ட இடத்தில் ஏற்பட்ட எரிச்சலினால் அலறி துடித்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காத லிடியா, ஜெயக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முடிவில் தான் மறைத்து வைத்திருந்த சர்ஜிக்கல் பிளேடினால் (ஆபரேசனுக்கு பயன்படுத்தப்படும் பிளேடு) ஜெயக்குமாரின் முகத்தில் தாக்கினார். இதில் ஜெயக்குமாருக்கு 13 இன்ச் அளவில் முகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை செய்தனர். மேலும் லிடியாவும், ஜெயக்குமாரும் விஜயநகரா காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் லிடியா, இந்த சம்பவத்தில் இருந்து தப்பிக்க ஜெயக்குமார் தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக நாடகம் ஆடினார்.
ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் காதலன் மீது ஆசிட் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து நர்சு லிடியாவை போலீசார் கைது செய்தனர்.
அவர் ஜெயக்குமார் மீது ஆசிட் வீசி, பிளேடால் தாக்கியதையும் ஒப்புக் கொண்டார். அவர் மீது விஜயநகரா போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொதுவாக, ஆண்கள் தான் பெண்களை பழி தீர்க்க ஆசிட் வீச்சு போன்ற முயற்சிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் ஒரு பெண் பழி தீர்க்க ஆண் மீது ஆசிட் வீச்சு நடத்தியிருப்பது இதுவே முதல் முறை என பரபரப்பாக பேசப்படுகிறது.