செய்திகள்
கொடைக்கானலில் புற்கள் மீது படர்ந்துள்ள உறைபனியை படத்தில் காணலாம்

கொடைக்கானலில் உறைபனியால் சுற்றுலா பயணிகள் அவதி

Published On 2016-12-26 02:40 GMT   |   Update On 2016-12-26 02:40 GMT
கொடைக்கானலில் உறைபனியால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர். இன்னும் ஒரு மாத காலத்திற்கு கொடைக்கானலில் கடும் குளிரான கால நிலை நிலவும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் நிலவி வருகிறது. பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தாலும், மாலை நேரத்தில் இருந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. வழக்கத்தை விட நேற்று முன்தினம் இரவு கடும் குளிர் நிலவியது. நேரம் செல்லச்செல்ல உறைபனியாக மாறியது. அடர்ந்து படர்ந்த புற்கள், செடி, கொடிகளில் உறைபனி ஆக்கிரமித்துள்ளன.

இதனால் பச்சைப்பசேல் என்று காட்சி அளித்த அவைகள் கருக தொடங்கியுள்ளன. குறிப்பாக கொடைக்கானல் ஏரிச்சாலை, ஜிம்கானா போன்ற பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் உறைபனி படிந்ததால் அப்பகுதி முழுவதும் பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.

இதன் எதிரொலியாக கொடைக்கானல் நகரில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களும், சுற்றுலா பயணிகளும் நேற்று அவதியடைந்தனர். மேலும் உறைபனி காரணமாக வாகனங்களில் உள்ள டீசல், ஆயில் உறைந்து போனது. இதனால் அதனை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

வனப்பகுதியில் உள்ள புற்கள், நீர்நிலைகளும் உறைந்து போனதால் உணவு, தண்ணீருக்காக நகர் பகுதிக்கு வனவிலங்குகள் வரத்தொடங்கின. மேலும் சுற்றுலா பயணிகள் விடுதி அறைகளிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனாலும் ஒரு சிலர், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் உறைபனியின் தாக்கத்தினால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இன்னும் ஒரு மாத காலத்திற்கு கொடைக்கானலில் கடும் குளிரான கால நிலை நிலவும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Similar News