செய்திகள்

ராணிப்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: உறவினர் கைது

Published On 2016-12-11 11:56 GMT   |   Update On 2016-12-11 11:56 GMT
ராணிப்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த பொன்னை பகுதியை சேர்ந்தவர் கலா (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருடைய பெரியம்மா மகனின் நினைவு தினம் ஆற்காட்டை அடுத்த ஆயிலம் காலனி பகுதியில் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக கலா, தனது பெற்றோருடன் பெரியம்மா வீட்டிற்கு வந்தார். அங்கு நினைவு தின நிகழ்ச்சி முடிந்த பிறகு அன்று இரவு அங்கேயே கலாவும், அவருடை பெற்றோரும் தங்கினர். நேற்று முன்தினம் கலா பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.

இதனையடுத்து அவரது உறவினர் ரூபன் (32) என்பவர், கலாவை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.

ஆனால் ரூபன், கலாவை பள்ளிக்கு அழைத்து செல்லாமல் சோளிங்கர் பகுதிக்கு அழைத்து சென்று கலாவை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கலாவின் பெற்றோர் ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து, ரூபனை கைது செய்தனர்.

கைதான ரூபன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், ஆற்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

Similar News