செய்திகள்

பயிர்கள் காய்ந்ததால் நிவாரணம் வழங்க கோரி பெண்கள் மறியல்: 116 பேர் கைது

Published On 2016-12-03 06:44 GMT   |   Update On 2016-12-03 06:44 GMT
மழை இல்லாமல் பயிர்கள் காய்ந்ததால் நிவாரணம் வழங்க கோரி மறியலில் ஈடுபட முயன்ற 116 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்த விவசாயிகள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கபட்டு பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மயிலாப்பூர், கெருகம்பாக்கம், எறையூர், மொன்னவேடு, சோம தேவன்பட்டு, தேவந்தவாக்கம், மெய்யூர், ராஜபாளையம் கிராமங்களில் அதிக அளவில் விவசாயிகள் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் உரங்கள் பற்றாக்குறை, பூச்சி கொல்லி மருந்துகளின் விலை ஏற்றம், எலிகள் தொல்லை இப்படி பல இன்னல்களை தாங்கி கொண்டு சம்பா நெற்பயிர் சாகுபடி செய்தனர்.

ஆனால் மழை பெய்ததால் இந்த கிராமங்களில் சுமார் 2010 ஏக்கர் நிலபரப்பில் சாகுபடி செய்த நெற்பயிர் கருகியது. கருகிய நெற்பயிர்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டனர். இதனால் தங்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஊத்துக்கோட்டை அருகே உள்ள மயிலாப்பூர் கிராமத்தில் மறியலில் ஈடுபட கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதையொட்டி விவசாய சங்க மாவட்ட செயலாளர் துளசி நாராயணன், திருவள்ளூர் வட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோரின் தலைமையில் கிராம மக்கள் மறியல் செய்ய முயன்றனர். தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. மாணிக்கம் தலைமையில் உள்ள நூற்றுக்கணக்கான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

மறியலில் ஈடுபட முயன்ற 116 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 62 பேர் பெண்கள். கைது செய்த விவசாயிகள் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கபட்டு பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Similar News