செய்திகள்

வக்கீல்களின் நலனுக்காக பாடுபடுவேன்: மோகனகிருஷ்ணன் பேட்டி

Published On 2016-11-25 09:53 GMT   |   Update On 2016-11-25 09:53 GMT
வக்கீல்களின் நலனுக்காக பாடுபடுவேன் என்று ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் தேர்தல் கடந்த 23-ந்தேதி நடந்தது.

இந்த தேர்தலில் 16 பதவிகளுக்கு 79 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 3 ஆயிரத்து 847 ஓட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டன.

இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மோகனகிருஷ்ணன் 2 ஆயிரத்து 106 ஓட்டுக்கள் பெற்று 1,004 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2013 வரை தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். தற்போது 2-வது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வக்கீல் மோகனகிருஷ்ணன் கூறியதாவது:-

2011-ம் ஆண்டு ஏற்கனவே தலைவராகவும் 2006-ல் இருந்து 2011 வரை செயலாளராகவும் இருந்துள்ளேன். தற்போது 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

வக்கீல்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். என்னை தேர்வு செய்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வக்கீல் சுதா 1,175 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவர்களுக்கு பதிவான ஓட்டுக்கள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதன் முடிவு பிற்பகலில் அறிவிக்கப்படும். அதன் பின்னர் பொருளாளர் பதவிக்கு பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படும்.

Similar News