செய்திகள்

காலதாமதமாக வழக்கு தொடர்ந்தவர் அரசு பள்ளிக்கூடத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2016-11-02 09:07 GMT   |   Update On 2016-11-02 09:07 GMT
காலதாமதமாக வழக்கு தொடர்ந்தவர் அரசு பள்ளிக்கூடத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை முன்சீப் கோர்ட் டில், அருள்மிகு நாகரீஸ்வரர் கோவில் நிர்வாகம் ஒரு வழக்கு தொடர்ந்தது.

அதில், கோவிலுக்கு சொந்தமான வீட்டில் வசிக்கும் நபர்களை வெளியேற்ற வேண்டும். அவர்களிடம் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த வழக்கை விசாரணையின்போது எதிர் மனுதாரர்கள் ஆஜராகாதால், ஒரு தலைபட்சமாக முடிவு செய்து தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, 3650 நாட்கள் காலதாமதமாக வீட்டில் வசிப்பவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவையும் காஞ்சீபுரம் கோர்ட்டு 2008ம் ஆண்டு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து ஐகோர்ட் டில், வாடகைதாரர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை காலதாமதமாக தாக்கல் செய்ததற்கு வழக்கு செலவு (அபராதம்) விதித்தால் அதை ஏற்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். அப்போது, ‘தமிழகத்தில் பல பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு முறையான கழிவறை வசதிகள் கூட இல்லை. மனுதாரர்கள் ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்துக்கு நன்கொடை வழங்கினால் என்ன?’ என்று மனுதாரர்களின் வக்கீலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த வக்கீல் தன் கட்சிக்காரர்களிடம் கருத்து கேட்டு, பள்ளிக்கூடத்துக்கு நன்கொடை செலுத்த தயார் என்று பதிலளித்தார்.

இதையடுத்து, ‘சென்னை ஐய்யப்பன்தாங்கலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ரூ.10 ஆயிரத்தை 2 வாரத்துக்குள் கேட்பு காசோலையாக வழங்கவேண்டும். இந்த தொகையை கொண்டு, பள்ளிக்கூடத்தில் சுத்தமான கழிவறையை தலைமை ஆசிரியர் கட்டவேண்டும்’ என்று நீதிபதி எம்.வி.முரளி தரன் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், அந்த உத்தரவில், மனுதாரர்களின் மனுவை தள்ளுபடி செய்து காஞ்சீபுரம் முதன்மை முன்சீப் கோர்ட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும், மனு தாரர்களின் மனுவை மீண்டும் விசாரித்து 3 வாரத்துக்குள் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Similar News