செய்திகள்
வாணியம்பாடி அருகே பள்ளி பஸ் மோதி 4-ம் வகுப்பு மாணவன் பலி
வாணியம்பாடி அருகே பள்ளி பஸ் மோதி 4-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே உள்ள கூத்தாண்ட குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் தினேஷ் (வயது9) வாணியம்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
தினமும் பள்ளி பஸ்சில் சென்று வந்தான். இன்று காலை பஸ்சில் செல்வதற்காக கூத்தாண்ட குப்பம் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தான் வழக்கம் போல் பஸ் வந்தது. பஸ்சில் ஏறுவதற்காக மாணவன் வந்தான். அப்போது நிற்காமல் வந்த பஸ் மாணவர் மீது மோதியது. இதில் பஸ் டயருக்குள் சிக்கிய தினேஷ் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாணியம்பாடி போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.