செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.

தஞ்சையில் அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2016-10-22 09:16 GMT   |   Update On 2016-10-22 09:16 GMT
தஞ்சையில் வணிக வரித்துறை அதிகாரி வீட்டில் மர்ம நபர்கள் 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை சாரதா நகரை சேர்ந்தவர் காமராஜ்(வயது 58) இவர் விருதுநகரில் வணிகவரித்துறை உதவி ஆணையராக உள்ளார். இவரது மனைவி மல்லிகா.

விருதுநகரில் இருந்து தஞ்சைக்கு வந்த காமராஜ் நேற்று மாலை தனது மனைவி மல்லிகா மற்றும் குடும்பத்தினருடன் தீபாவளிக்கு புத்தாடைகள் எடுப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு தஞ்சையில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்றனர்.

இதனைநோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் நகை, ரூ. 21 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டின் அறையில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இந்நிலையில் இரவு புத்தாடைகள் வாங்கிவிட்டு குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்த காமராஜ் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காமராஜ் அளித்த புகாரின்பேரில் மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Similar News