செய்திகள்

தஞ்சை தொகுதி தேர்தல் பணம் பரிவர்த்தனையை கண்காணிக்க வேண்டும்: வங்கி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

Published On 2016-10-21 06:11 GMT   |   Update On 2016-10-21 06:11 GMT
தஞ்சை தொகுதி தேர்தல் பணம் பரிவர்த்தனையை கண்காணிக்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து வங்கியாளர்களும் தேர்தல் தொடர்பான விதிமுறைகள் கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம் தஞ்சை சட்டசபை தொகுதி தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து வங்கிகளில் ரூ.1 லட்சத்திற்கு மேல் மற்றும் ஒரு கணக்கிலிருந்து பல நபர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரே நாளில் பணபரிவர்த்தனை நடைபெற்றால் அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பணம் சொந்த பயன்பாட்டிற்காக எடுத்துச்செல்லும் போது உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 327 வங்கிகளும் தினமும் நடைபெறும் பணபரிவர்த்தனை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை கொடுக்க வேண்டும். மேலும் ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுக்கும் பொது மக்கள் தங்களுடைய ரசீதை பத்திரமாக எடுத்துச்செல்ல வேண்டும்.

வாகன பரிசோதனை செய்யப்படும் போது உரிய ஆவணம் காண்பித்தால் பொதுமக்கள் தங்களுடைய பணத்தை எடுத்துசெல்வதற்கு வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேசன், தேர்தல் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Similar News