பெரியகுளம் அருகே குடி போதையில் தகராறு செய்த கணவரை கொன்ற மனைவி
பெரியகுளம்:
பெரியகுளம் அருகில் உள்ள இ.புதுக்கோட்டை கக்கன்ஜி காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி புஷ்பம் என்பவரை பெற்றோர் எதிர்ப்பையும் மீறி 2-வது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவருடனே வாழ்ந்து வந்தார்.
புஷ்பத்தின் முதல் கணவர் ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன் மனைவியை விட்டு விலகி செல்லுமாறு கூறியும் அவர் கேட்கவில்லை. மேலும் சுப்பிரமணிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் குடித்து விட்டு வந்து புஷ்பத்திடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை முருகனுக்கு புஷ்பம் தகவல் தெரிவித்தார். முருகன் வந்து பார்த்து விட்டு தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து புஷ்பத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது மது அருந்தி விட்டு தினமும் தன்னை தொந்தரவு செய்ததால் அவரது வாயில் துணியை வைத்து அமுக்கி தானும் தனது சகோதரி தனலெட்சுமியும் கொலை செய்ததாகவும் பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டதாகவும் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் புஷ்பம் மற்றும் தன லெட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.