செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு?: கோவையில் 8 வாலிபர்களிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை

Published On 2016-10-05 11:42 GMT   |   Update On 2016-10-05 11:42 GMT
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக கோவையில் 8 வாலிபர்களிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கேரளாவில் கடந்த 2-ந் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேரை தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்த அபுபஷீர்(வயது 29) என்பவர் ஒருவராவார். கோவையை சேர்ந்த சில வாலிபர்கள் இவருடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கோவைக்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், அபுபஷீருடன் தொடர்பில் இருந்த நவாஸ் (22), உபைதுர் ரகுமான்(25), நவாஸ் கான்(23), நவ்புல்(24) மற்றும் அபுதாகிர்(22) ஆகியோரை பிடித்து கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இவர்களில் சிலர் அபுபஷீருடன் பேஸ்புக்கில் சாட்டிங் செய்துவிட்டு அதனை அழித்துள்ளனர். எனவே இவர்கள் என்னென்ன தகவல்களை பரிமாறிக் கொண்டார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.

இவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் ஷேக் அபியுல்லா, நாசர், அப்துல் வகாப் ஆகிய 3 பேரையும் விசாரணைக்கு வரவழைத்தனர். கேரளாவில் கைதான அபுபஷீருக்கு இவர்கள் எத்தனை ஆண்டுகள் நண்பர்களாக இருந்தனர்? இவர்கள் எந்த பகுதியிலாவது கூட்டம் போட்டு பேசினார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தேசிய புலனாய்வு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கேரளாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி கோவையில் படித்தவர். அவருடன் நண்பர்களாக பழகிய சிலர் பேஸ்புக்கில் பல நாட்களாக பேசி வந்தது தெரியவந்ததை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் செல்போன், லேப்டாப்களையும் சோதனை செய்தோம்.

இவர்கள் பேஸ்புக்கில் பரிமாறிய தகவல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர திட்டமிட்டிருந்தார்களா? என்று கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அபுபஷீருடன் பேஸ்புக் தொடர்பில் இருந்த மேலும் சிலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் தற்போது போலீஸ் விசாரணை வளையத்திற்குள் உள்ள 8 பேரிடமும் இன்று 4-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News