செய்திகள்

அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கணவர் கொலை: செல்போனில் கடைசியாக பேசிய 5 பேரிடம் விசாரணை

Published On 2016-10-03 05:48 GMT   |   Update On 2016-10-03 05:48 GMT
அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கணவர் கொலையில் கடைசியாக செல்போனில் பேசிய 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னிமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). பில்டிங் காண்டிராக்டர், இவரது மனைவி மலர். இவர் குன்னூர் நகராட்சி 19-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார்.

உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு மீண்டும் அதே வார்டில் நிற்க மலருக்கு சீட்டு கிடைத்துள்ளது.

இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் கன்னிமாரியம்மன் அருகே உள்ள சாலையில் சுப்பிரமணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து குன்னூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் சுப்பிரமணி உடலை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் மலருக்கு மீண்டும் சீட் கிடைத்ததால் அரசியல் முன்விரோதமாக அவரது கணவரை மர்ம கும்பல் கொலை செய்ததா? அல்லது தொழில் போட்டியால் கொலை நடந்ததா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே சுப்பிரமணியை கொலை செய்த கும்பலை உடனே கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை எடுக்க விடமாட்டோம்’’ என்று பொது மக்கள் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று மாலை திடீர் மறியல் செய்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதைதொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பொது மக்களை சமாதானப்படுத்தினர் .

இந்த நிலையில் சுப்பிரமணி செல்போனில் கடைசியாக பேசியவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன்படி அவர் கடைசியாக பேசிய 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி போலீசார் கூறும் போது, ‘‘ பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். சுப்பிரமணி போனில் பேசிய 5 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். விரைவில் கொலையாளிகள் பிடி படுவார்கள்’ என்று தெரிவித்தனர்.

Similar News