செய்திகள்

காட்பாடி அருகே 70 வயது மூதாட்டி கற்பழித்து கொலை: வாலிபரை கட்டி வைத்து அடி, உதை

Published On 2016-09-26 08:14 GMT   |   Update On 2016-09-26 08:14 GMT
காட்பாடி அருகே 70 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக அடித்து, உதைத்தனர்.
வேலூர்:

காட்பாடி அடுத்த பள்ளத்தூரில் மாங்குட்டை என்ற பகுதி உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே காந்தம்மாள் (வயது 70) என்ற மூதாட்டி சிறிய கூடாரம் அமைத்து தங்கி இருந்தார்.

ஆதரவின்றி தவித்த மூதாட்டி காந்தம்மாளுக்கு குடும்பம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. அப்பகுதி மக்கள் கொடுக்கும் உணவு பொருட்களை உட்கொண்டு வாழ்ந்து வந்தார். காந்தம்மாள் வயது முதிர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் சிலர் அன்பு காட்டினர்.

நேற்றிரவு வழக்கம்போல் காந்தம்மாள் தனது கூடாரத்தில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் அந்த வழியாக பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 25) என்ற வாலிபர் குடிபோதையில் தள்ளாடியபடி நடந்து சென்றார்.

அப்போது அவர், கூடாரத்தில் தனியாக தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை நோட்டமிட்டார். ஆள் நடமாட்டம் குறைந்தவுடன் கூடாரத்திற்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை கற்பழிக்க முயன்றார். ராமமூர்த்தியின் பிடியில் இருந்து தப்பிக்க காந்தம்மாள் போராடினார். இதில் மூதாட்டி காந்தம்மாள் பரிதாபமாக இறந்தார்.

விடிந்ததும் தெரியாமல் வாலிபர் ராமமூர்த்தி பிணத்தின் மீது படுத்தே கிடந்தார். நீண்ட நேரமாகியும் மூதாட்டி வெளியே வராததால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கூடாரத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது, மூதாட்டி மீது ராமமூர்த்தி படுத்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ராமமூர்த்தியை அடித்து எழுப்பினர். ஆடைகள் கலையப்பட்டு மூதாட்டி அசைவின்றி கிடந்தார்.

அப்போது தான், கற்பழிக்கப்படும்போது மூதாட்டி இறந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், ராமமூர்த்தியை பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து, உதைத்தனர்.

தகவலறிந்த பனமடங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்கள் பிடியில் இருந்த ராமமூர்த்தியை மீட்டனர். இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மூதாட்டி இறப்பை கொலை வழக்காக பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News