நிலக்கோட்டை அருகே வாலிபரை கொன்று ஓடையில் பிணம் வீச்சு
நிலக்கோட்டை:
நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் சங்கால்பட்டி ஓடை அருகே இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி.சுருளியாண்டி தலைமையில் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அவர் உடலில் பல இடங்களில் ரத்த காயம் இருந்ததால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இறந்த வாலிபர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், இளஞ்சிவப்பு நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார்.
சம்பவ இடத்துக்கு திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் இறந்து கிடந்த வாலிபரின் உடலை முகர்ந்து பார்த்து விட்டு நான்கு திசைகளிலும் ஓடியது. இதனையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.