செய்திகள்

ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்பினார்: அரசு பணிகளை கவனித்தார்

Published On 2016-09-26 05:43 GMT   |   Update On 2016-09-26 05:43 GMT
முதல்-அமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணம் அடைந்து விட்டாலும் இன்னும் டாக்டர்களின் தொடர் சிகிச்சை கண்காணிப்பில் உள்ளார். ஆஸ்பத்திரியில் இருந்தபடியே முக்கிய அலுவலக பணிகளை கவனித்து வருகிறார்.
சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டதால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சலும் குணம் அடைந்தது. அவர் இயல்பு நிலைக்கு திரும்பி அரசு பணிகளை கவனித்து வருகிறார்.

இதனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழக்கம் போல் உணவுகளை சாப்பிடுகிறார். அவருக்கு போயஸ்கார்டனில் இருந்து உணவு கொண்டு செல்லப்படுகிறது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் வார்டில் உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு உதவியாக சசிகலா, இளவரசி ஆகியோர் ஆஸ்பத்திரியிலேயே தங்கி உள்ளனர்.

ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் அரசு உயர் அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர்.

அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மகளிரணியினர் தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சில மணி நேரம் நின்று விட்டு நிலவரத்தை கேட்டறிந்து செல்கிறார்கள்.

ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி கோவில்களில் பூஜை செய்து பிரசாதங்களையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்கிறார்கள்.

ஆஸ்பத்திரியில் 5-வது நாளாக இருக்கும் ஜெயலலிதா முழுமையாக குணம் அடைந்து விட்டாலும் இன்னும் டாக்டர்களின் தொடர் சிகிச்சை கண்காணிப்பில் உள்ளார். இதனால் அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை ஆஸ்பத்திரியில் இருந்தபடியே முக்கிய அலுவலக பணிகளை மேற்கொண்டு வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

Similar News