செய்திகள்

தர்மபுரி அருகே காதலி வீட்டு முன்பு வி‌ஷம் குடித்த காதலன் சாவு

Published On 2016-09-08 04:58 GMT   |   Update On 2016-09-08 04:58 GMT
தர்மபுரி அருகே காதலியின் வீட்டின் முன்பு காதலன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி:

விழுப்புரம் மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் இளம்பரிதி (25). இவர் பி.எஸ்.சி. படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் சாக்கடை நீர் சுத்திகரிக்கும் நிலையத்தில் சூப்பர் வைசராக பணிபுரிந்து வந்தார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் ஹீராஸ்ரீ(24). இவர் சென்னையில் இசைப்பள்ளியில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பயின்று வந்தார்.

இந்த நிலையில் இளம்பரிதியும், ஹீராஸ்ரீயும் சென்னையில் சந்தித்து நட்பாக பழகி வந்தனர். பின்னர் அது காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர்.

இதையடுத்து இசைப்பள்ளியில் படிப்பை முடித்து விட்டு ஹீராஸ்ரீ சென்னையில் இருந்து சொந்த ஊரான பாப்பாரப்பட்டிக்கு திரும்பி வந்து விட்டார். அவர் ஊருக்கு திரும்பியதும் கடந்த 3 மாதங்களாக இளம்பரிதியிடம் வாட்ஸ்அப் மற்றும் செல்போன் மூலம் எந்தவித தொடர்பு இல்லாமலும், பேசமாலும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஹீராஸ்ரீக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் அவரை தேடி பாப்பாரப்பட்டியில் உள்ள வீட்டுக்கு இளம்பரிதி வந்தார்.

அங்கு ஹீராஸ்ரீயின் பெற்றோரிடம் அவர் ஹீராஸ்ரீயை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இளம்பரிதியை திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்தனர்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் தர்மபுரிக்கு வந்து கடையில் சென்று பூச்சி மருந்து பாட்டிலை வாங்கினார்.

பின்னர் அந்த பாட்டிலை தனது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்அப்பில் தனது அண்ணன் சிலம்பரன் மற்றும் நண்பர்களுக்கு ஹீராஸ்ரீ கிடைக்காததால் தான் வி‌ஷம் குடித்து இறந்து போவதாக மெசேஜ் அனுப்பினார்.

இதனால் பதறிப்போன இளம்பரிதி அண்ணன் அவரை செல்போனில் தொடர்புக் கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பூச்சி மருந்து பாட்டிலுடன் பாப்பாரப்பட்டியில் உள்ள ஹீராஸ்ரீ வீட்டுக்கு மீண்டும் வந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் ஹீராஸ்ரீ வீட்டின் முன்பு பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை இளம்பரிதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து இளம்பரிதி அண்ணன் சிலம்பரசன் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலியின் வீட்டின் முன்பு காதலன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News