செய்திகள்

பேஸ்புக் மூலம் காதல்: நைஜீரியாவை சேர்ந்தவருடன் பெண் விரிவுரையாளர் திருமணம்

Published On 2016-09-07 02:29 GMT   |   Update On 2016-09-07 02:30 GMT
‘பேஸ்புக்’ மூலம் காதலித்த நைஜீரியாவை சேர்ந்த வாலிபரை காரைக்காலை சேர்ந்த பெண் விரிவுரையாளர் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
காரைக்கால்:

காரைக்கால் பச்சூரை சேர்ந்தவர் ஞானசேகரன். காரைக்காலில் உள்ள ஒரு பிரபல வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சத்தியப்பிரியா என்கிற சனா (வயது 27). இவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தபோது அவருடன் படித்த நைஜீரியாவை சேர்ந்த இப்ராகிம் இசாக்குடன் (32) ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது.

முதலில் நண்பர்களாக பழகி வந்த அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். அதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தபோது, அவர்கள் பச்சைக்கொடி காட்டினர். அதனை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன.

நேற்று முன்தினம் காரைக்காலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மணமகள் பச்சைநிற பூப்போட்ட ஜரிகை பட்டுப்புடவையும், மணமகன் பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டு அங்கவஸ்திரமும் அணிந்திருந்தார். இந்து முறைப்படி மணமகளின் கழுத்தில் அவர் தாலிகட்டினார்.

இந்த திருமணத்தில் மணமகளின் குடும்பத்தினர் மற்றும் மணமகனின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

மணமகன் இப்ராகிம் இசாக், நைஜீரியாவில் உள்ள கடுவா சாங்கோ சமாரு சாரியாவை சேர்ந்தவர். இவரது தந்தை பால்பிண்டார் இசாக், அங்குள்ள அகமதுபெல்லோ பல்கலைக்கழகத்தில் பேரா சிரியராக பணியாற்றி வருகிறார். தாயார் மைமூனா இசாக், அங்குள்ள ராணுவ கல்லூரியில் நூலகராக உள்ளார்.

மணமகன் இப்ராகிம் இசாக் நைஜீரியாவில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். மணமகள் சத்தியப் பிரியா காரைக்காலில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். திருமண விழாவில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Similar News