செய்திகள்

வேலூரில் துப்பட்டா கழுத்தை இறுக்கி 2-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2016-08-16 09:31 GMT   |   Update On 2016-08-16 09:31 GMT
வேலூரில் சுடிதார் துப்பட்டா கழுத்தை இறுக்கி 2-ம் வகுப்பு மாணவி இறந்தார்.
வேலூர்:

வேலூர் சலவன்பேட்டை இளங்கோ சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார். கூலி தொழிலாளி. இவரது மகள் ஹேமலட்சுமி (வயது 7).

குட்டைமேட்டில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். ஹேமலட்சுமி எப்போதும் சுடிதார் துப்பட்டாவை கையில் எடுத்து கழுத்தில் சுற்றி போட்டுக்கொண்டு விளையாடுவார்.

நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். அப்போது அவர் சுடிதார் துப்பட்டாவை கழுத்தில் போட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்.

அவர் வைத்து இருந்த சுடிதார் துப்பட்டா கழுத்திலும், காலிலும் சிக்கியது. அதனை எடுக்க முடியாமல் ஹேமலட்சுமி திணறினார். இதில் அவரது கழுத்தில் சிக்கிய துப்பட்டா கழுத்தை பலமாக இறுக்கியது.

இதனால் மூச்சு விட முடியாமல் ஹேமலட்சுமி திணறினார். இதை யாரும் கவனிக்கவில்லை. தொடர்ந்து வெகுநேரமாக மூச்சு விடமுடியாத இருந்ததால் ஹேமலட்சுமி இறந்தார்.

பிணமாக கிடந்து அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News