செய்திகள்
டோனி, கிர்மானி

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனி சிறந்த கேப்டன் - முன்னாள் வீரர் கிர்மானி

Published On 2020-05-30 11:30 GMT   |   Update On 2020-05-30 11:30 GMT
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனி தான் சிறந்த கேப்டன் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் கபில் தேவ். அதற்கு அடுத்த படியாக டோனி உலகக் கோப்பை வென்று சாதித்தார்.

கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983-ம் ஆண்டு உலக கோப்பையை (50 ஓவர்) கைப்பற்றியது.

மகேந்திர சிங் டோனி 2 உலகக் கோப்பையை வென்றார். 2007-ல் நடந்த அறிமுக 20 ஓவர் உலக கோப்பையை அவர் தலைமையிலான அணி கைப்பற்றியது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் உலகக்கோப்பையை (ஒருநாள் போட்டி) வென்று முத்திரை பதித்தார்.  இதைப் போல ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் (2013) பெற்றுக் கொடுத்தார்.

இந்திய அணிக்காக சாதித்த டோனி தற்போது ஓய்வு முடிவை எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. விரைவில் அவர் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவுகின்றன. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பைக்கு பிறகு அவர் எந்த போட்டியிலும் ஆடவில்லை.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனி தான் சிறந்த கேப்டன் என்று முன்னாள் விக்கெட் கீப்பரும், 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தவருமான சையது கிர்மானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

என்னை பொறுத்தவரை இந்திய கேப்டன்களில் டோனி தான் சிறந்தவர். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அவருக்கு இருக்கும் நற்சான்றிதழ் வேறு யாருக்கும் இல்லை. இதை நான் உரிய மரியாதையுடன் சொல்ல விரும்புகிறேன்.

நான் இப்படி சொல்வதால் எனக்கு கேப்டன்களாக இருந்தவர்களுக்கு காயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இதுதான் உண்மை. அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சில உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

டோனிக்கு தனது எதிர்காலம் குறித்து நன்றாக தெரியும். அவர் அமைதியாக இருக்கிறார். தனது எதிர்காலத்திட்டம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்திய அணிக்காக டோனி மீண்டும் விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவர் தனது கனவுகளையும், குறிக்கோளையும் ஏற்கனவே அடைந்துவிட்டார். அவர் சாதிப்பதற்கு இன்னும் எதுவும் இல்லை. இதனால் அவர் அணிக்கு திரும்ப வேண்டிய அவசியம் எதுவுமில்லை.

எப்படி இருந்தாலும் முடிவு எடுக்க வேண்டியது டோனியின் கையில்தான் இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்தி மூலம் அவர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டி அவரது கடைசி ஆட்டமாக இருக்கலாம்.

இவ்வாறு சையது கிர்மானி கூறியுள்ளார்.

டோனி இந்திய அணிக்காக மட்டுமின்றி ஐ.பி.எல். போட்டியிலும் சாதித்தார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை 3 முறை (2010, 2011, 2018) பெற்றுக் கொடுத்தார். 5 தடவை இரண்டாவது இடத்தை பிடித்தது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் (அக்டோபர் - நவம்பர்) ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News