செய்திகள்
கேப்டன் சிவா பந்தை விளாசிய காட்சி.

டிஎன்பிஎல்: காரைக்குடி காளை அணிக்கு 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தூத்துக்குடி

Published On 2019-08-01 15:55 GMT   |   Update On 2019-08-01 15:55 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற 176 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி.
திண்டுக்கல்:

தமிழ்நாடு பிரிமீயர் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் காரைக்குடி காளை அணியை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற தூத்துக்குடி அணியின் கேப்டன் சிவா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி தொடக்க வீரர்களாக அந்த அணியின் ஸ்ரீனிவாசன் மற்றும் கமலேஷ் ஆகியோர் களமிறங்கினர். ஸ்ரீனிவாசன் 9 ரன், கமலேஷ் 2 ரன் மற்றும் அபிஷேக் 8 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராஜ கோபால், வெங்கடேஷ் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ராஜ கோபால் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வெங்கடேஷ் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சிவா அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை மளமளவென உயர்த்தினார். சிவா 40 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 87 ரன்களுடனும், வெங்கடேஷ் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனால் தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. 

காரைக்குடி தரப்பில் அந்த அணியின் முகுந்தன், கிஷான் குமார் மற்றும் ராஜ்குமார் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி அணி விளையாடி வருகிறது.
Tags:    

Similar News