செய்திகள்

நடுவரை திருடன் என திட்டிய செரீனா வில்லியம்ஸ்

Published On 2018-09-09 07:24 GMT   |   Update On 2018-09-09 09:08 GMT
அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் பெனால்டி வழங்கிய கோபத்தில் நடுவரை திருடன் என்று செரீனா வில்லியம்ஸ் திட்டியுள்ளார். #USOpen #SerenaWilliams
அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்தார். அவர் 2 விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.

முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை.

2-வதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்தார். இதனால் செரீனா பல முறை கோபத்தில் நடுவரை திட்டி தீர்த்தார். அவர் கூறியதாவது:-

நான் மோசடி எதுவும் செய்யவில்லை. பயிற்சியாளர் என்ன சிக்னல் கொடுத்தார் என்று நான் பார்க்கவில்லை. நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். திருடர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் தான் என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இந்த விளையாட்டில் ஆண்களை விட பெண்களிடம் நடுவர்கள் நடந்து கொள்ளும் விதம் வேறுபாடானது. வீராங்கனைகளுக்கு சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண்களின் உரிமைக்காக நான் போராடுகிறேன்.

இவ்வாறு 36 வயதான செரீனா தெரிவித்தார்.

இதற்கிடையே அவரது பயிற்சியாளர் சைகை மூலம் சிக்னல் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தான் கொடுத்த சைகையை செரீனா பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். #USOpen #SerenaWilliams
Tags:    

Similar News