செய்திகள்

பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணிக்கு அனுமதி கிடைக்குமா?: மத்திய மந்திரி பதில்

Published On 2017-03-30 04:42 GMT   |   Update On 2017-03-30 04:42 GMT
பாகிஸ்தான் அணியுடன் பொதுவான இடமான துபாயில் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புதுடெல்லி :

ஒப்பந்தப்படி இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட மறுப்பதால் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புலம்பி வருகிறது. விரைவில் நடக்க உள்ள ஐ.சி.சி. கூட்டத்தில் இந்த பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான் அணியுடன் பொதுவான இடமான துபாயில் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானுடன் விளையாடலாம் என்பது கிரிக்கெட் வாரியத்தின் எண்ணமாகும்.ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி ஹன்ஸ்ராஜ் அஹிரிடம் நேற்று நிருபர்கள் இது தொடர்பாக கேட்ட போது, ‘இது குறித்து உள்துறை மந்திரியும், உள்துறை அமைச்சகமும் தான் முடிவு செய்யும். ஆனால் தற்போதைய சூழலில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு அனுமதி அளிப்பது சரியாக இருக்காது’ என்றார்.

Similar News