செய்திகள்

முதல் ஒருநாள் கிரிக்கெட்: இலங்கைக்கு 325 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்

Published On 2017-03-25 13:14 GMT   |   Update On 2017-03-25 13:14 GMT
தம்புல்லாவில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமீம் இக்பால் சதத்தால் இலங்கை அணிக்கு 325 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்.
இலங்கை - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.

தம்புல்லாவில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி வங்காள தேச அணியின் தமீம் இக்பால், சவுமியா சர்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

சவுமியா சர்கர் 10 ரன்கள் எடுத்த நிலையில் லக்மல் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து சபீர் ரஹ்மான் களம் இறங்கினார். இவரும், தமீம் இக்பாலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சபீர் ரஹ்மான் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 1 ரன்னில் வெளியேறினார். அப்போது வங்காள தேசம் 22.1 ஒவரில் 120 ரன்கள் எடுத்திருந்தது.

4-வது விக்கெட்டுக்கு தமீம் இக்பால் உடன் சாஹிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் அபாரமாக விளையாடியது. சாஹிப் அல் ஹசன் 71 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 72 ரன்கள் சேர்த்தார்.




சதம் அடித்த தமீம் இக்பால் 142 பநதில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 127 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 144 ரன்கள் சேர்த்தது. 6-வது நபராக களம் இறங்கிய மொசாடெக் ஹொசைன் 9 பந்தில் 24 ரன்கள் சேர்க்க வங்காள தேசம் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது.

பின்னர் 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை சேஸிங் செய்து வருகிறது.

Similar News