செய்திகள்

சொந்த ஊரில் சாதித்த கேதர் ஜாதவ்

Published On 2017-01-16 08:19 GMT   |   Update On 2017-01-16 08:19 GMT
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 65 பந்தில் சதம் அடித்த கேதர் ஜாதவ் தனது சொந்த ஊரில் முத்திரை பதித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான புனேயில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் கேதர் ஜாதவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 76 பந்தில் 120 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். இதில் 12 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

26 வயதான அவர் 65 பந்தில் சதம் அடித்தார். இதன்மூலம் அதிவேகத்தில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை கேதர்ஜாதவ் பெற்றார். விராட்கோலி, சேவாக், அசாருதீன், யுவராஜ்சிங் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அவர் உள்ளார். இதில் விராட்கோலி 2 முறை அதிவேகத்தில் செஞ்சூரியை தொட்டுள்ளார்.

கேதர் ஜாதவ் விராட்கோலியுடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 200 ரன்களை சேர்த்தார். விராட் கோலி ஆட்டம் இழந்த பிறகு பொறுப்புடன் நின்று அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். 60 ரன் தேவை இருந்தபோது தான் வெளியேறினார்.

2014-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான கேதர் ஜாதவுக்கு இது 2-வது சதமாகும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஹராரேயில் 105 ரன் எடுத்திருந்தார். தனது 13-வது போட்டியில் அவர் 2-வது சதத்தை பதிவு செய்து இருக்கிறார்.

இந்த அதிரடியான ஆட்டத்தை அவர் தனது சொந்த ஊரில் வெளிப்படுத்தி முத்திரை பதித்தார். கேதர் ஜாதவ் மராட்டிய மாநிலம் புனேயில் 1985-ம் ஆண்டு மார்ச் 26-ந்தேதி பிறந்தார். அவரது ஆட்டத்தை காண உறவினர்களும், ரசிகர்களும் திரண்டு வந்து இருந்தனர். அவர்களுக்கு விருந்து கிடைக்கும் வகையில் கேதர்ஜாதவ் தனது அதிரடியாக விளையாடினார்.

மிடில் ஆர்டர் வரிசையில் இந்திய அணிக்கு கிடைத்த புதிய நட்சத்திரமாக கேதர்ஜாதவ் ஜொலிக்கிறார்.

Similar News