செய்திகள்

ஆடுகளம் வேகப்பந்துக்கு இரண்டு மடங்கு ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கவில்லை: ரகானே சொல்கிறார்

Published On 2016-09-30 14:09 GMT   |   Update On 2016-09-30 14:09 GMT
கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் வேகப்பந்துக்கு இரண்டு மடங்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று ரகானே கூறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று தொடங்கிய இந்த போட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் பொதுவாக பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமான ஆடுகளம். முதல் மூன்று நாட்கள் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்கலாம். அதன்பின் பந்து அதிக அளவு திரும்பும்.

ஆனால், இன்றைய போட்டியின்போது ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. முதல் 10 ஓவர் வேகப்பந்திற்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும். பந்து பளபளப்பை இழந்த பின் ஆடுகளம் வேகப்பந்துக்கு எடுபடாது. ஆனால், இன்றைய நாள் முழுவதும் வேகப்பந்து வீச்சுக்கு ஆடுகளம் அதிக அளவு ஒத்துழைத்தது.

இந்தியா 46 ரன்னிற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்த பின், புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் குவித்தனர். ரகானே 77 ரன்கள் குவித்தார். புஜாரா 87 ரன்கள் குவித்தார்.

இன்றைய ஆட்டம் குறித்து ரகானே கூறுகையில் ‘‘ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு இரண்டு மடங்கு ஒத்துழைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆடுகளம் மிகச்சிறந்த அளவில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். பொதுவாக கொல்கத்தா ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

பேட்ஸ்மேன்கள் அவுட்டானதற்கு எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது. நாங்கள் சில தவறான ஷாட்டுகளை அடித்தோம். அந்த தவறுகளில் இருந்து விரைவாக பாடம் கற்றுக்கொண்டு திரும்பவும் நல்ல நிலைமையை பெறுவோம்.

பழி அனைத்தும் என்னையும், புஜாராவைத்தான் சேரும். இருவரும் நல்ல ஜோடி அமைத்து நிலைத்து நின்றோம். அந்த வேகத்தோடு அணியை முன்னெடுத்துச் செல்வது எங்களது பொறுப்பு. பேட்ஸ்மேன் அவுட்டாவதற்கு ஒரு பந்துதான் தேவை. இருவரில் ஒருவர் சதம் அடித்திருந்தால் கதை வேறுமாதிரி ஆயிருக்கும்.

2-வது செசனில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். தேனீர் இடைவேளைக்குப் பிறகு நாங்கள் கவனைத்தை இழந்து விக்கெட்டை பறிக்கொடுத்தோம். இரண்டு விக்கெட்டுக்களை கூடுதலாக இழந்து விட்டோம். முதல் நாளில் ஐந்து விக்கெட்டுக்கள் இழப்பு என்பதுதான் உகந்தது. மேலும் 75 முதல் 100 ரன்கள் அடித்தால் சிறந்ததாக இருக்கும். நாங்கள் 325 முதல் 350 ரன்கள் சேர்ப்பது தேவையானது’’ என்றார்.

Similar News