செய்திகள்

இந்திய டெஸ்ட் அணி நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும்: டோனி

Published On 2016-08-30 00:06 GMT   |   Update On 2016-08-30 00:06 GMT
உலகின் நம்பர் ஒன் இடத்தை நமது டெஸ்ட் அணி மீண்டும் பிடிக்கும் என இந்திய அணியின் கேப்டன் டோனி கூறினார்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இந்திய ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்திய டெஸ்ட் அணி நல்ல நிலையில் இருப்பதாக கருதுகிறேன். இதே போல் 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி அணியும் மிக நன்றாக அமைந்து விட்டது. அணி சிறந்த பேட்டிங் அனுபவத்தை பெற்றுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஒரு சில மாற்றங்களை தவிர ஏறக்குறைய இதே பேட்ஸ்மேன்களுடன் தான் விளையாடியிருக்கிறோம். எனவே நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

இன்னொரு சாதகமான விஷயம் என்னவென்றால், நமது வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் இப்போது முழு உடல்தகுதியுடன் உள்ளனர். 10 சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். இது நமக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இனி நிறைய போட்டிகளில் விளையாட இருப்பதால், வேகப்பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த சீசனில் இந்திய அணி 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சீசனுக்குள் எல்லாம் சரியாக அமைந்தால், உலகின் நம்பர் ஒன் இடத்தை நமது டெஸ்ட் அணி மீண்டும் பிடிக்கும். முதலிடத்தில் உள்ள அணிக்கும், 2-வது இடத்தில் உள்ள நமக்கும் சிறிய வித்தியாசமே இருக்கிறது’ என்றார்.
   

Similar News