செய்திகள்

ஊக்கமருந்து சோதனையில் மேலும் ஒரு இந்திய மல்யுத்த வீரர் சிக்கினார்

Published On 2016-07-25 09:34 GMT   |   Update On 2016-07-25 09:34 GMT
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் துல்சி யாதவ் என்ற மல்யுத்த வீரரும் தற்போது சிக்கியுள்ளார்.
புதுடெல்லி:

2008 மற்றும் 2012-ல் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் கலந்து கொண்ட ஏராளமான வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனால் சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது எனவும், வெளிப்படையான தன்மையுடன் போட்டிகள் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதாலும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் வீரர்களுக்கு சரியான முறையில் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்த விஷயத்தில் கண்டிப்புடன் இருக்கிறது. ரஷ்யா தடகள வீரர்கள் அதிக அளவில் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கி ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ள முடியாத நிலையில உள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவும் தங்களுடைய வீரர்கள் எந்த வித சிக்கலிலும் சிக்கிவிடக்கூடாது என்பதால் ஊக்கமருந்து சோதனையை நடத்தி வருகிறது. அதன்படி தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நர்சிங் யாதவின் ரத்த மாதிரியை சோதனை செய்தது. இதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருடன் விளையாடும் சந்தீப் துல்சி யாதவும் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளது. இதனால் இந்திய மல்யுத்த பெடரேஷன் அதிர்ச்சியடைந்துள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ள நர்சிங், ஊக்க மருந்து விவகாரம் குறித்து கூறுகையில் ‘‘எனக்கு எதிராக பின்னப்பட்ட சதி வேலை’’ என்று கூறினார்.

Similar News