என் மலர்
புதுச்சேரி
- புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது.
- கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி காவல்துறை சார்பில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வருவதற்காகப் பயன்படுத்தும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் ஒரு சில சாலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கிறது.
பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, போக்கு வரத்துத்துறையுடன் கலந்து பேசி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகரப் பகுதி முழுவதும் சுற்றுலா வரும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லாமல் அரசு பஸ்சில் பயணம் செய்யும் வசதியை அறிமுகம் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறோம்.
இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியுடன் விரைவில் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும். புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது. இதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் மேலும் ஒரு பட்டாலியன் படையைத் தொடங்க அனுமதி அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
ஏற்கெனவே புதுச்சேரியில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் ஒரு சிலர் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். அவருக்குதான் அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது.
த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் புகலிடமாக இருப்பதாகத் தகவல் எதுவும் இல்லை. மேலும் அந்தக் கட்சி ஏற்கெனவே ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்தது. இப்போது கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது. மீண்டும் அனுமதி கேட்டால் அப்போது முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஜூவாலலைதீன் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
- 4 மீன்பிடி படகுகள் உள்ளூர் மீனவர்களால் அதே துறைமுகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மீனவர்களின் 4 படகுகளை விடுவிக்க கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஜூவாலலைதீன் துறைமுகத்தில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கீழாகா சாகுடி பகுதியை சேர்ந்த கலைமணி மற்றும் முத்துதமிழ்செல்வன் ஆகியோருக்கு சொந்தமான படகுகள், உள்ளூர் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு ஜூவாலலைதீன் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதேபோல் காரைக்கால் கிளிஞ்சல் மேடு பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதத்துக்கு சொந்தமான 2 படகுகள் என மொத்தம் 4 மீன்பிடி படகுகள் உள்ளூர் மீனவர்களால் அதே துறைமுகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை விரைந்து விடுவிப்பதற்கு ஆந்திர அரசு அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அனைத்திற்கும் நாளை (அக்டோபர் 03) அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை என்பதால் நாளையும் புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- விஜய் வார இறுதி நாட்களில் தமிழகத்தின் மாவட்டம்தோறும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.
- த.வெ.க.வினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரி:
தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கியுள்ளார். அவர் வார இறுதி நாட்களில் தமிழகத்தின் மாவட்டம்தோறும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் 11-ந் தேதி காலை புதுச்சேரிக்கு வர உள்ளார். இதனையொட்டி த.வெ.க. மாநில நிர்வாகிகள் புதியவன், நிரேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரசாரம் நடத்த அனுமதி கோரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் மனு அளித்தனர். புதுவை காவல்துறை சார்பில் கலந்து ஆலோசித்த பின் மீண்டும் அழைப்பதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து த.வெ.க.வினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அவர்களிடம் விவரத்தை கேட்டு அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி மனுவை மாவட்ட கலெக்டருக்கு கையெழுத்திட்டு பரிந்துரை செய்தார்.
வருகிற 11-ந் தேதி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காலை 11 மணிக்கு வரும் விஜய்க்கு த.வெ.க.வினர் காலாப்பட்டில் வரவேற்பு தருகின்றனர். அங்கிருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பஸ்சில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் அவர், புதுவை அஜந்தா சிக்னல், எஸ்.வி.பட்டேல் சாலை, அண்ணா சாலை, சோனாம்பாளையம், மரப்பாலம் பகுதிகளில் விஜய் ரோடு ஷோ நடத்தவும், சோனாம் பாளையம் வாட்டர் டேங்க் அருகே விஜய் பேசவும் அனுமதி கோரி உள்ளனர்.
தொடர்ந்து பஸ்சில் அரியாங்குப்பம், மண வெளி, கன்னியகோவில் வழியாக மக்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி விஜய் கடலூர் செல்கிறார். விஜய் பிரச்சாரத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளிக்கும் என தெரிகிறது.
- புதுச்சேரியில் உள்ள பல படித்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு சென்று வேலை செய்கின்றனர்.
- புதுச்சேரியில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளது.
புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாடு மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் சார்லஸ் மார்ட்டின் கலந்துகொண்டு, வணிகர்கள் நாட்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசங்கரன், அங்காளன், ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியில் 50 சதவீத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்றும் 30 சதவீதம் பேர் வெளியூர் சென்று வேலை பார்ப்பதாகவும் கூறினார். மேலும் வணிகர்கள் சுலபமாக வணிகம் செய்ய ஒற்றை சாளர முறையை (Single Window System) உருவாக்க வேண்டும் எனவும், இங்கு ரவுடீசம் அதிகமாக உள்ளது என தொழில் செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே பல தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வருவதில்லை. இனி வரும் காலத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வரும். அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரியில் உள்ள பல படித்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு சென்று வேலை செய்கின்றனர். புதுச்சேரியில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது அவற்றை பண்படுத்தி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும். மக்களும் அதைதான் விரும்புகிறார்கள், அது நிச்சயம் நடக்கும் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நம்பிக்கை தெரிவித்தார்.
- 4 ஆண்டுகளாகியும் அனந்தநாயகி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
- போலீசார் அனந்த நாயகி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டை சமுதாய நலக்கூடம் பகுதியை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 70). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி கணவர்களுடன் தனித்தனியே வசித்து வருகிறார்கள்.
இதில் 3-வது மகள் அனந்தநாயகி (37). இவர் தனக்கு சொந்தமான வீட்டு பத்திரத்தை கடந்த 2021-ம் ஆண்டு குடும்ப தேவைக்காக தனது தாயார் ராஜேஸ்வரியிடம் அடகு வைத்து ரூ.2லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கொடுத்து பத்திரத்தை மீட்டு கொள்வதாக உறுதி கூறியுள்ளார்.
ஆனால் 4 ஆண்டுகளாகியும் அனந்தநாயகி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதற்கிடையே பத்திரத்தை ராஜேஸ்வரி சிலரிடம் காண்பித்த போது அது கலர் ஜெராக்ஸ் பத்திரம் என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி தனது மகளிடம் பணம் அல்லது ஒரிஜினல் பத்திரத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராஜேஸ்வரி, தனது மகள் அனந்தநாயகி மீது புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அனந்த நாயகி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும்.
- கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர் விஜய் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு "76 வருஷம் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் பார்த்துவிட்டோம். விஜய் பற்றி எதுவும் கேட்காதீர்கள். இதை வெளிப்படையாக சொல்கிறேன்" என்றார்.
அவருக்கு கூட்டம் அதிக அளவில் கூடுகிறதே? எனக் கேள்வி எழுப்ப, "நாராயணசாமி நாயுடு என்பவர் 1980களில் இருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கா?. தெரியுமா?. தெரியாதா.., அவர் விவசாய கட்சியை நடத்தினர். அவருக்கு மக்கள் அதிக அளவில் கூடினர். 1980 தேர்தலுக்கு முன்னாடி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். இந்திரா காந்தி சென்று பார்த்தார். கலைஞரும் சென்று பார்த்தார். மூன்று பேரும் ஆதரவு கேட்பதற்கான போனார்கள். அந்த கட்சி இப்போது இருக்கா? இப்படி பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். கூட்டத்தை வைத்து எட போட முடியாது.
40 வருடத்திற்கு முன்னதாக, எம்.ஜி.ஆர்.ஐ எதிர்த்து பழனிபாபா பேசி வந்தார். நான், பேராசிரியர் வெள்ளாளர் தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினோம். அதன் அருகில் பழனிபாபா பேசினார். எங்கள் கூட்டத்திற்கு 100 பேர்தான் வந்திருந்தனர். அவரது கூட்டத்திற்கு 50 ஆயிரம் பேர் வந்தனர். அப்போது பேராசிரியர், இது கொள்கை கூட்டம். இது மாயை கூட்டம் என்றார். அந்த கூட்டம் என்னாச்சு?
திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும். கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.
விஜய்க்கு கூடும் கூட்டம் மாயை கூட்டம் என எடுத்துக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, அதை நீங்கள்தான் முடிவு செய்யனும் என பதில் அளித்தார்.
- தமிழகத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி புதுச்சேரிக்கும் பொருந்தும்.
- புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி சிலை, நூலகம், தொகுதி அலுவலகம் திறப்பு விழா என முப்பெரும் விழா இன்று நடந்தது.
கதிர்காமம் தொகுதி செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, தொகுதி துணை செயலாளர் தங்க தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. தலைமை கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான சிவா ஆகியோர் கருணாநிதி சிலை, நூலகம் மற்றும் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி புதுச்சேரிக்கும் பொருந்தும். ஓரணியில் தமிழ்நாடு என தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை மு.க. ஸ்டாலின் தொடங்கினார். ஒரு கோடி வீடுகளுக்கு திமுக தொண்டர்கள் சென்று, 2.70 கோடி உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்துள்ளனர்.
அடுத்தகட்டமாக புதுவை மாநிலத்திலும் வருகிற 2026 தேர்தலையொட்டி ஒரு வாரத்துக்குள் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தலைமை கழகத்தால் அறிவிக்கப்படும். புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும்.
இதற்கான ஆயத்த பணியை தொடங்க கதிர்காமம் பகுதியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு, கருணாநிதி சிலை திறப்பு, இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்ததுபோல நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 30 தொகுதியிலும் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். 30 தொகுதியிலும் திமுக வெற்றி பெற ஆயத்த பணிகளை மேற்கொள்வோம்.
புதுச்சேரியில் 4 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்துள்ளது. 5-வது முறையாக புதுச்சேரி மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி அமையும் வகையில் உறுப்பினர் சேர்க்கை அமைய வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தேர்தல் நேரத்தில் தலைமை எடுக்கும் கூட்டணி முடிவுகள், தொகுதி பங்கீடு அமையும்.
புதுச்சேரிக்கும் சேர்த்து தமிழக தி.மு.க.தான் தலைமை. ஸ்டாலினும், ராகுல்காந்தியும் இணைந்து தமிழகம், புதுச்சேரி மாநில முடிவுகளை எடுப்பார்கள். யாருக்கு எத்தனை சீட் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். அதை தி.மு.க ஏற்கும், காங்கிரசும் ஏற்கும் என நம்புகிறேன். 30 தொகுதியிலும் வெற்றி பெறும் வாய்ப்புகளை தி.மு.க. உருவாக்கும்.
அண்ணாமலை பியூஸ் போன பல்பு. அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரை நாங்கள் சரியாக உள்ளோம். நாங்கள் வெற்றி பெறப்போவது நிச்சயம். தி.மு.க. கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என 2019 முதல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
அவர் கூட்டணியிலிருந்து அல்ல, கட்சியிலிருந்து பாதி பேர் வெளியே சென்று விட்டனர். ஒவ்வொருவராக தி.மு.க.வில் சேர்ந்து வருகின்றனர். எடப்பாடி அவர் நிலையை முதலில் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விஜய் பற்றி கேட்காதீர்கள். 1980 தேர்தலுக்கு நாராயணசாமி நாயுடுக்கு மிகப்பெரும் கூட்டம் கூடியது.
அவரை இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர், கருணாநிதி சென்று பார்த்தனர். அந்த கட்சி இப்போது எங்கே உள்ளது? இதுபோல பல உதாரணம் உள்ளது. கூட்டம் சேர்வதை வைத்து கணக்கிட கூடாது. திடீர் பிள்ளை யாருக்கு கூட கூட்டம் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நகரப்பகுதியான உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் கடந்த 7-ந் தேதி பலருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது.
அவர்களில் 3 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தனர். பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பொது பணித்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், முத்தரையர் பாளையத்தில் இருந்து நகரப் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதனை உடனடியாக சீரமைத்தனர்.
இந்த நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகர், ராஜய்யா தோட்டம், புது அய்யனார் கோவில் தெரு பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டடோர் நேற்று மாலை வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் நீர் வடிகால் வாய்க்கால் மூலம் ஆறுகள் வழியாக கடலில் கலக்கிறது.
- நீர்வரத்து அதிகரிப்பால் கொமந்தான் மேடு தரைபாலத்தில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது.
பாகூர்:
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கு வதற்கு முன்பாகவே கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது.
அதுபோல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் நீர் வடிகால் வாய்க்கால் மூலம் ஆறுகள் வழியாக கடலில் கலக்கிறது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளான திருவண்ணா மலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 3000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
அதன்படி தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பாகூர் வருவாய் துறை, மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், கரையோரம் அமைந்துள்ள புதுவை கிராமங்களான மணமேடு, சோரியாங் குப்பம், ஆராய்ச்சிக்குப்பம் கொமந்தான்மேடு ஆகிய கரையோர கிராமங்களுக்கு நேரில் சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் கொமந்தான் மேடு தரைபாலத்தில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது. அப்பகுதியில் தரைப்பாலம் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் சாலையும் மூழ்கியது.
இதனால் அவ்வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. அதேபோல் சித்தேரி அணைக்கட்டிலும் நீர்வரத்து அதிகரிப்பால் அந்த வழியும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், விவசாயிகள் பல கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று வருகின்றனர்.
- மோசடி நடைபெறுகிறது என அறிந்தும் ஆன்லைனில் பணத்தை பலர் செலுத்தி ஏமாறுகின்றனர்.
- உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரி:
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகிவருகிறது.
குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இருந்தே பொருட்களை வாங்க பொதுமக்கள் விருப்பம் காட்டுகின்றனர். ஆனால் இதில் மோசடி நடைபெறுகிறது என அறிந்தும் ஆன்லைனில் பணத்தை பலர் செலுத்தி ஏமாறுகின்றனர்.
இதில் பட்டாசு பொருட்களும் விதி விலக்கல்ல. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியான எச்சரிக்கை மற்றும் அறிவுரை விடுத்தும் மீண்டும் மீண்டும் போலியான ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்த வருட தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் நிறைய புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது.
உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
எனவே பொதுமக்கள் இணையத்தில் எந்த பொருளை வாங்கும் முன்பும் அதனுடைய உண்மை, தன்மையையும் அதை விற்பவருடைய முழு விவரங்களையும் நன்கு சோதித்து பார்த்தபின் வாங்க வேண்டும் என்றும் இணைய வழி அறிவிப்புகளை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
- ஏற்றுமதி, இறக்குமதி கலால் வரியும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
- புதுவையில் கடந்த ஆண்டு கலால்துறை ரூ.1500 கோடி வருவாய் கிடைத்தது.
புதுச்சேரி:
புதுவையில் பிராந்தி, பீர், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள் 558 உள்ளன.
மது கடைகள் ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். உரிமம் கட்டணத்தை கடந்த 2015-க்கு பிறகு 10 ஆண்டுகளாக அரசு உயர்த்தவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உரிமம் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால், அரசாணை வெளியாகவில்லை. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி உரிமம் கட்டணம் உயர்வு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆண்டுக்கு 20 லட்சம் லிட்டர் மது உற்பத்தி செய்யும் ஐ.எம்.எப்.எல். மதுபான தொழிற்சாலைகளுக்கான உரிமக் கட்டணம் ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் 1 லட்சம் லிட்டர் மது உற்பத்திக்கும் ரூ.2 லட்சம் உரிமம் தொகை செலுத்த வேண்டும்.
எப்.எல். 1 என்ற மொத்த மதுபான விற்பனை கடைகளுக்கான உரிமம் கட்டணம் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும், எப்.எல். 2 சில்லரை மதுபான கடைகளுக்கான உரிமம் கட்டணம் ரூ.19 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் அனைத்து வகை உரிமம் கட்டணங்களும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது
இதுபோல் ஏற்றுமதி, இறக்குமதி கலால் வரியும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி கலால் வரியும் 2018-க்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. பீர் ஒரு லிட்டருக்கு ரூ. 3.50 இருந்து ரூ.5 ஆகவும், மதுபானங்கள் லிட்டருக்கு ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆகவும் உயர்ந்துள்ளது. ஏற்றுமதி வரி 2001-ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. புதுவையிலிருந்து ஏற்றுமதியாகும் பீர்களுக்கு ஒரு லிட்டருக்கு 75 பைசாவில் இருந்து ரூ. 5 ஆகவும், மதுபானங்களுக்கு ரூ. 1-ல் இருந்து ரூ.7 ஆகவும் உயர்ந்துள்ளது.
புத்தாண்டு காலங்களில் மதுபானங்களை விற்க சிறப்பு அனுமதி பெற கட்டணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை அரசிதழிலும் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
புதுவையில் கடந்த ஆண்டு கலால்துறை ரூ.1500 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு ரூ.1850 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு உரிமக்கட்டணம், ஏற்றுமதி, இறக்குமதி வரி உயர்வு மூலம் கூடுதலாக ரூ.100 கோடி வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






