கடந்த ஓராண்டிற்கு பிறகு திருப்பதியில் ரூ.2 கோடியாக குறைந்த உண்டியல் வருவாய்
- இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் 50 ஆயிரம் பேர் என தரிசன டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது.
- திருப்பதியில் நேற்று 47,781 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரானா தொற்றுக்குப் பிறகு கடந்த ஒரு ஆண்டாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தினமும் 60 முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வந்தனர்.
இதனால் உண்டியல் வருவாயும் அதிகரித்து மாதத்திற்கு ரூ.120 முதல் ரூ.130 கோடி வரை வசூல் ஆனது.
ஒரு நாளைக்கு சுமார் 3 கோடிக்கு மேல் உண்டியல் வருவாய் வந்தது.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதனை முன்னிட்டு 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான அறிவித்து இருந்தது.
தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 20 ஆயிரம் பேரும், இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் 50 ஆயிரம் பேர் என தரிசன டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது.
இதனால் வைகுண்ட ஏகாதசி மற்றும்தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பக்தர்கள் கூட்டம் பாதியாக குறைந்தது.
திருப்பதியில் நேற்று 47,781 பேர் தரிசனம் செய்தனர். 15,695 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
கடந்த ஓராண்டிற்கு பின்னர் திருப்பதியில் ஊண்டியல் வருவாய் ரூ.2 கோடி அளவிற்கு குறைந்துள்ளது.