இந்தியா

குப்பை வண்டியில் பிரதமரின் புகைப்படம்: பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் மீண்டும் பணியில் சேர்ப்பு

Published On 2022-07-20 02:13 GMT   |   Update On 2022-07-20 02:13 GMT
  • உத்தரபிரதேசம் மதுரா மாவட்டத்தை சேர்ந்தவர் நகராட்சி தூய்மைப்பணியாளர் பாபி.
  • பாபி சரிவர பணியை செய்யவில்லை என கூறி அவரை நகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

லக்னோ

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி தூய்மைப்பணியாளர் பாபி. இவர் நகராட்சி பகுதிக்கு உள்பட்ட ஜெனரல்கஞ்ச் பகுதியில் கடந்த சனிக்கிழமை வழக்கமான பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது, பாபி குப்பை கொண்டு செல்லும் வண்டியில் பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை ஏற்றி சென்றுள்ளார்.

பிரதமர் மோடி, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை குப்பை வண்டியில் ஏற்றி சென்றது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து தூய்மைப்பணியாளர் பாபி சரிவர பணியை செய்யவில்லை என கூறி அவரை நகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

ஆனால் பாபியோ, தான் தனது வேலையை மட்டுமே செய்து வருவதாகவும், குப்பையில் உருவப்படங்கள் காணப்படுவது தனது தவறில்லை என்றும் கூறி வந்தார். அவரை பணி நீக்கம் செய்த நிகழ்வு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

இந்த நிலையில், குப்பை வண்டியில் பிரதமரின் புகைப்படங்களை எடுத்துச் சென்றதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, மதுரா-பிருந்தாவன் நகர் நிகாம் நகராட்சி ஆணையர் அனுநயா ஜா கூறுகையில், தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, எச்சரித்து மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாக தெரிவித்தார்.

Similar News